திருப்போரூர்: திருப்போரூர் காவல் நிலையத்தில் உள்ள தென்னை மரத்தின் ஓலை, இன்று காலை காற்றின் வேகத்தில் அருகிலுள்ள மின்மாற்றியில் உரசியதில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்குள் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.
திருப்போரூர் தெற்கு மாடவீதியில் காவல் நிலையம் இயங்கி வருகிறது. இக்காவல் நிலைய வளாகத்தில் சுமார் 5க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. இந்நிலையில், இன்று காலை திருப்போரூர் காவல் நிலையத்தில் தென்னை மரத்தை ஒட்டியுள்ள மின்மாற்றியில் தென்னை ஓலை உரசியதில் திடீரென தீப்பிடித்து எரியத் துவங்கியது.
பின்னர் அனைத்து ஓலைகளுக்கும் தீ பரவி, கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து திருப்போரூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அங்கு மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, அப்பகுதி மின் இணைப்பை துண்டித்தனர். இதையடுத்து, தீப்பற்றி எரிந்த தென்னை மரத்தின்மீது தண்ணீரை பீய்ச்சியடித்து, ஓலையில் பரவியிருந்த தீயை முற்றிலும் அணைத்தனர். பின்னர் அந்த தென்னை மரத்தில் தீப்பிடித்த தென்னை ஓலைகள் வெட்டப்பட்டு, அப்பகுதியில் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.
The post திருப்போரூர் காவல் நிலையத்தில் மின்மாற்றியில் தென்னை ஓலை உரசி தீ விபத்து appeared first on Dinakaran.